காந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி? பரபரக்கும் அரசியல் களம்
Recommended Video
சென்னை:அதிமுகவுடனான கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்தை சமாதானப் படுத்தவே... பாஜகவின் தூதுவராக ரஜினிகாந்த் சந்தித்து சென்றுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் செய்திகள் கசிந்துள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளுக்கு பஞ்சமில்லாமல் தமிழக நிலவரம் காணப்படுகிறது. கடந்த தேர்தலில் 37 தொகுதிகளை வென்றிருந்த அதிமுக கூட்டணியுடன் இம்முறை களம் இறங்குகிறது.
12 தொகுதிகளை பாமக, பாஜகவுக்கு அதிமுக பிரித்து கொடுத்துவிட்டது. தேமுதிகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையோ... தொங்குபாலம் போல.. அங்கும் இங்கும் ஊசலாடி கொண்டிருக்கிறது.
முரண்டு பிடிக்கும் தேமுதிக
கூட்டணி பேச வந்த பியூஷ் கோயல்.. உடல்நலம் குறித்து விஜயகாந்தை சந்தித்து கேட்க வந்ததாக கூறி பேட்டியளித்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். அதிமுகவிடம் 9 தொகுதிகள் வரை தேமுதிக முரண்டு பிடிப்பதால்... பேச்சு வார்த்தையும் முடிவுக்கு வரவில்லை.
விருப்ப மனு அளிக்கலாம்
அதே நேரத்தில் 40 தொகுதிகளுக்கும் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தேமுதிக அறிவித்துவிட்டது. இது பாஜக மற்றும் அதிமுகவுக்கு ஜெர்க்கான விஷயம் என்று கூறப்பட்டாலும்... அதிமுக அவ்வளவாக இதை கண்டு கொள்ளாது என்றே தெரிகிறது.
சமாதானப்படுத்தும் பாஜக
ஆனால்... விஜயகாந்தின் அடுத்த கட்ட மூவ்களை கடந்த சில நாட்களாக அதிரடியாக கண்ட பாஜக சமாதானப்படுத்த இறங்கியிருக்கிறது. அதன் ஒரு கட்டம் தான் தற்போது விஜயகாந்த், ரஜினிகாந்தின் சந்திப்பு. அரசியல் களத்தில் இருவரின் பாணி தனி என்றாலும்... நட்பு களத்தில் இருவரும் ஒரே நீரோட்டத்தில் பயணிப்பவர்கள் என்பது திரையுலகம் நன்கறிந்த ஒன்று.
ரஜினி சந்திப்பு
அதனை பயன்படுத்தி... விஜயகாந்தை சமாதானப்படுத்தவே... ரஜினியை பாஜக தூது அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த சந்திப்பும் அரங்கேறி விட்டது.
பாஜக தூது?
லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி கூறியிருந்தாலும் கூட, யார் சொன்னாலும் கேட்காத விஜயகாந்தை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர ரஜினி மூலம் பாஜக தூது விடுகிறது என்று அரசியல் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
திருநாவுக்கரசர் சந்திப்பு
முன்னதாக... தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினார். அரசியல் சம்மந்தமாக தான் பேசினோம் என திருநாவுக்கரசர் கூறியிருப்பது நினைவிருக்கலாம்.