நீட் விவகாரத்தில் பச்சை பொய் சொல்வதை நிறுத்துங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது, மீண்டும் மீண்டும் பழி போடுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்தி கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறாமல் கோட்டை விட்ட அதிமுக அரசு, இந்த வரலாற்றுப் பிழையை மறைக்க திமுக மீது பழி சுமத்தி வருவதாக ஸ்டாலின் சாடியுள்ளார்.
நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். அவர்கள் தற்போது எங்கள் மீது பழியை திருப்பி விடுகிறார்கள் என குற்றம்சாட்டினார். முதல்வரின் நேற்றைய பேச்சுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.! சிலிர்க்கும் அமெரிக்க சபாநாயகர்
வாய் கூசாமல் பொய் சொல்லும் எடப்பாடி
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக தான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் என முதல்வர் பழனிசாமி, பச்சைப் பொய்யை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை முதலில் எதிர்த்தது முதலல்வராக இருந்த கலைஞர் தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார். ஆகவே தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட்டை நிறுத்த முடியாமல் தள்ளாட்டம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் இருந்த போதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு, தமிழக மாணவர்கள் மீது நீட் திணிக்கப்பட்டுள்ளது. இப்போது நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடி பணிந்து- அதிமுக ஆட்சி இன்றுவரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீட் விலக்கு மசோதா தமிழக பேரவையில் 2017-ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து நீட்டை தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சி தான்.
தவறான தகவல் தரும் முதல்வர்
அது மட்டுமல்ல நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பின்னும் 21 மாதங்கள் அதை மறைத்து, அரசியல் சட்டப் பிரிவில் "வித்ஹெல்டு" என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும் தான். பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதும் அதிமுக தான். 6 மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரை வார்த்து விட்டு- பா.ஜ.க.வின் "நீட் தேர்வு" மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதலமைச்சர் பழனிசாமி தான் என சாடியுள்ளார் ஸ்டாலின்.
அதிமுக அரசுக்கு கடும் எச்சரிக்கை
நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததும் திமுக ஆட்சி தான். நுழைவுத் தேர்வை சட்ட பூர்வமாக ரத்து செய்து, இன்றைக்கு பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறக் காரணமாக இருந்ததும் திமுக ஆட்சி தான். இதை வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர் மற்றும் முதல்வருக்கு தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். இனியாவது வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் கூறி தங்கள் மீதுள்ள கரையை வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிமுக அரசை கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார் ஸ்டாலின்.