தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா உறுதி.. 110 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிக அளவில் உள்ளது. பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தினமும் 100ஐ தாண்டி செல்கிறது. சில மாவட்டங்களில் ஒரு மாதமாக 200க்கும் அதிகமானோர் தினமும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்.
சென்னை, கோவை, வேலூர், சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இதில் சென்னையில் மட்டும்தான் ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது. தமிழகத்திற்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால் தொற்று பாதிப்பை விட தினமும் குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நானெல்லாம் அங்க போக மாட்டேன்ம்பா...தலைவர்தான் எனக்கு...அனிதா ராதாகிருஷ்ணன்!!
சராசரியாக 5500
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக 5500 என்கிற சராசரியில் தொற்று பாதிப்பு தமிழகத்தில் காணப்படுகிறது. உயிரிழப்பு தினமும் 100ஐ கடந்து வருகிறது.
பலி எண்ணிக்கை 4571
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 2,21,087 ஆக உயர்ந்துள்ளது.
எவ்வளவு பரிசோதனை
தமிழகத்தில் இன்று 65,062 தனிநபர்களுக்கு 65,062 மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 29,10,468 தனிநபர்களுக்கு 30,10,468 மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகரித்த மரணம்
சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,04,983 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில் சென்னையில் 11720 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
செங்கல்பட்டில் உயர்வு
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 408 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும், ராணிப்பேட்டையில் 270 பேருக்கும் இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 239 பேருக்கும், திருநெல்வேலியில் 250 பேருக்கும், வேலூரில் 192 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.