இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்.. பாபாஜி குகை.. குருசரண் ஆசிரமங்களுக்கு ஆன்மீக பயணம்
சென்னை: தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 10 நாள் ஆன்மீக பயணமாக நடிகர் ரஜினி காந்த் இன்று காலை இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
நடிகர் ரஜினி காந்த் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனேயே ஆன்மீகப்பயணமாக இமயலை செல்வதை வழக்கமாக வைத்து வருகிறார். அப்படித்தான் இப்போதும் நடந்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் தர்பார் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கம்
இந்நிலையில் அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
டேராடூன் பயணம்
நடிகர் ரஜினி காந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முன்பு, 10 நாள் ஆன்மீக பயணமாக இமயலைக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக பிரபல தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்ற ரஜினி, இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார்.
ஆன்மீக பயணம்
அங்கிருந்து காரில் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினி, இந்த பயணத்தின் போது கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பயணிக்க உள்ளதாக நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபாஜி குகை
அத்துடன் துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்க உள்ளதாகவும் அதன்பிறகு பாபாஜி குகைக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு திரும்பும் ரஜினி சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.