இன்று மட்டும் 16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி தமிழகத்தில் முதலீடு.. முதல்வர் சூப்பர் தகவல்
சென்னை: இன்று மட்டும் 16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி தமிழகத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் இதன் மூலம் சுமார் 6,555 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "கொரோனா பேரிடரிலும், மக்களைக் காப்பதோடு தொழில் வளர்ச்சியை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று மட்டும் 16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 6,555 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
மும்பையைச் சேர்ந்த Projects Today நிறுவன ஆய்வின் படி, கொரோனா பேரிடர் காலத்திலும், அதாவது கடந்த 3 மாதங்களில் அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இன்னொரு ட்விட் பதிவில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் ரூ.2300 கோடி முதலீட்டில் சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Adani Enterprises Limited நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (23.07.2020) கையெழுத்தானது என்று கூறியுள்ளார்.
மரணத்திலும் பொய்கணக்கு.. முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஸ்டாலின் வீடியோ
முதல்வர் வெளியிட்டிருந்த மற்றொரு ட்விட் பதிவில், "காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் - வடகால் தொழிற்பூங்காவில் Super Auto Forge நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் Forged steel and Aluminium parts உற்பத்தி செய்யும் திட்டத்தினை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்று கூறியுள்ளார்.