இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு... ரூ.2½ லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டம்
சென்னை: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019, இன்று சென்னையில் தொடங்குகிறது.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந் தேதிகளில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, தமிழ்நாடு வானுர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.
நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இரண்டு நாள் மாநாட்டின் மூலம், 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.