சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா.. வெறும் 12 நாளில் 3000 பேருக்கு பரவியது எப்படி
சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பரவும் வேகம் மாநிலத்தின் மற்ற எல்லா மாவட்டங்களை ஒப்பிடும் போது மிகமிக அதிகம் ஆகும். குறிப்பாக கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி 674 ஆக இருந்து கொரோனா பாதிப்பு சென்னையில் அதன்பிறகு ஒரே வாரத்தில் படுவேகமாக அதிகரித்தது. கடந்த மே 4ம் தேதி இந்த எண்ணிக்கை 1000த்தை கடந்து உயர்ந்து 1729 ஆக அதிகரித்தது. மே 5ம் தேதி மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2008 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு பரவியது கொரோனா... சென்னையில்தான் வரலாறு காணாத பாதிப்பு
உச்சபட்ச பாதிப்பு
இந்த எண்ணிக்கை மே 9ம் தேதியான நேற்று 3330 ஆக உயர்ந்தது. இன்று ஒரு நாளில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் சென்னையில் கொரோனா தொற்றின் உச்சபட்ச வேகம் ஆகும். ஏன் தமிழகத்தின் எந்த ஒரு நகரத்திலும் இத்தனை பேருக்கு ஒரே நாளில் கொரோனா ஏற்பட்டது இல்லை. சென்னையில் இன்று 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னையில் ஒட்டுமொத்தமாக 3839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3171 பேர் சிகிச்சை
சென்னையில் தற்போதைய நிலையில் 639 இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3171 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனா பாதிப்பால் சென்னை மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு பக்கத்தில் உள்ள செங்கல்பட்டில் 206 பேரும் 272 பேரும், காஞ்சிபுரத்தில் 101 பேரும் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 3 மாவட்டங்களில் பாதி பகுதிகள் சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ளன. எனவே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 70 சதவீத சென்னை மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் உள்ளது.
இளம் வயதினர் அதிகம்
கோயம்பேடு சந்தை வழியாக பல்வேறு நபர்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பரவி உள்ளது. சென்னையில் இன்று கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள 509 பேரில் ஏராளமானோர் 60வயதுக்கு உட்பட்டவர்கள் தான். குழந்தைகளையும் கணிசமாக கொரோனா தொற்று இன்று பாதித்துள்ளது.
நாளை முழு விவரம்
தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் தான் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதன்பிறகு திருவிகநர், அண்ணா நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் கொரோனா பாதிப்பு இருந்தது. மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் நாளை காலை சென்னை மாநகராட்சி வெளியிடும் எனவே அப்போது தான் எந்த மண்டலத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எவ்வளவு பேர் குணம் அடைந்துள்ளார்கள் என்பது தெரியவரும்.