கனரக வாகனங்களை ஓட்ட லைசென்ஸ் பெற.. இன்று முதல் 8ம்வகுப்பு கல்வி தகுதி தேவையில்லை
சென்னை: கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற இனி 8ம்வகுப்பு கல்வி தேவையில்லை. இந்த நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் உள்ள ஆர்டிஒ அலுவலங்களில் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், தற்பொழுது போக்குவரத்து வாகனங்களை இயக்க மத்திய மோட்டார் வாகன விதியில் உள்ள 8ம் வகுப்பு கல்வித் தகுதியினை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நீக்கம் செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதன காரணமாக இன்று முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற கல்வி தகுதி தேவையில்லை என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன ஓட்டிகளுக்கு புதிய வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் 'சிப்' பொருத்தப்பட்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் தற்போது வழங்கப்படுகிறது. மேலும், கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைனில் செலுத்தப்படும் நடைமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.