இறுக்கமும் உண்டு.. இரும்பு பிடியும் உண்டு.. பொங்கி வழியும் தாய்மையும் உண்டு.. இதுதான்டா போலீஸ்!
இன்று தேசிய காவலர்கள் தினம் போற்றப்பட்டு வருகிறது
சென்னை: இன்று தேசிய காவலர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது!
வழக்கமாக அன்னையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம் என ஒவ்வொரு தினங்களும் சிறப்பாக கொண்டாடி விடுகிறோம்.. ஆனால், காவலர் தினத்தை மட்டும் பெருமளவு தவறவிட்டு விடுகிறோம்.. மற்ற தினங்களில் இல்லாத ஒரு ஸ்பெஷல் இந்த காவலர் தினத்துக்கு மட்டுமே உண்டு.
ஒவ்வொரு சிறப்பு தினமும் அவரவர் சொந்தங்களுக்காக, சுயநலத்திற்காக கொண்டாடப்படும்.. இந்த காவலர் தினம் மட்டும் ஒட்டுமொத்த போலீஸ்காரர்களுக்காக கொண்டாடப்படுவது! சுயநலமில்லாதது.. அர்ப்பணிப்பு மிகுந்தது! இன்னுயிர் ஈந்து நாட்டைக் காக்கும் காவலர் நினைவாக, இன்று தேசிய காவலர் வீரவணக்க தினம் போற்றப்படுகிறது.
காவலர்களும் சராசரி மனிதர்கள் என்பதை பல தருணங்களில் நாம் மறந்துவிடுகிறோம்.. பண்டிகை காலமாக இருந்தாலும் சரி, பதட்ட நேரமாக இருந்தாலும் சரி, காலநேரமின்றி வேலை பார்ப்பவர்கள்.. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் இவர்களின் பணி அளப்பரியது.
எத்தனையோ போலீஸ்காரர்கள், தங்கள் சொந்த பந்தங்கள், பெற்ற தாய் இறந்துவிட்ட நிலையிலும், அஞ்சலி செலுத்தக்கூட போக முடியாமல், கடமையை செவ்வனே ஆற்றிய நெகிழ்ச்சி சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக நடந்தன.. பல பேர் தங்கள் பெற்ற தாய், சகோதர்களின் இறுதிசடங்கினை வீடியோ காலில் கண்ணீர்விட்டு அழுத காட்சிகளையும் பார்த்து மலைத்தே போனோம். இதற்கெல்லாம் என்ன விலை கொடுத்தாலும் ஈடாகாது.
பண்டிகை நாட்களில் வீட்டில் இருந்து, குடும்பத்துடன் சேர்ந்து நல்ல நாளை கொண்டாட முடியாத அளவுக்கு ரோந்து பணியிலும் பந்தோபஸ்திலும், இவர்களின் அலைச்சலுக்கு உள்ளாகும் நிலைமையும் ஏற்பட்டு விடுகிறது.. இதனால் போதுமான லீவுகள் எடுக்க முடியாமல் மன ரீதியான உளைச்சலுக்கு ஆளாகும் அவலமும், அதை தொடர்ந்து அவர்கள் எடுக்கும் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளும் மக்களை நிலைகுலைய வைத்து வருவதை மறுக்க முடியாது.
அதேசமயம், கடுமையாக நடந்து கொள்ளும் சில போலீஸ்காரர்களால் ஒட்டுமொத்த துறைக்கும் கெட்ட பெயர் வந்துவிடும் அவலமும் உள்ளது.. அப்படித்தான் இன்னும் பென்னிக்ஸ் மரணத்துக்கும், சேலம் சிவனாண்டி கொலைக்கும் இன்னும் விடையே கிடைக்கவில்லை. எனினும், ஓரிருவர் செய்யும் தவறுக்காக எல்லாரையுமே குறைசொல்லி, இவர்களின் அர்ப்பணிப்பை கொச்சை படுத்த முடியாது.
ஹத்ராஸ் பெண்ணை நடுராத்திரி சுடுகாட்டுக்கு எடுத்து சென்று அத்துமீறி சடலத்தை கொளுத்தியது இதே போலீஸ்தான், இதனை கண்டித்து கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டத்தின்போது, இளம்தாயின் கையில் இருந்த கைகுழந்தையை அரண் போல சுற்றி நின்று காப்பாற்றியது.. நித்தம் நித்தம் நமக்காக பாடுபட்டு வரும் இந்த காவலர்களை ஊக்குவிக்க வருடத்தில் ஒருநாளேனும் இந்த நாளில் கூடி வாழ்த்து சொல்லுவோம்.. வளரட்டும் இவர்களின் சேவை.. பெருகட்டும் காக்கி சட்டைக்குள் கரிசன வெள்ளங்கள்!