சாணக்யா சாணக்யா.. ஏதோ வசியம் செய்தாயே.. இப்போதும் சாணக்யா சொன்னதே நடந்தது!
சென்னை: டுடேஸ் சாணக்யாவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு இம்முறையும் பலித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. 7 கட்டடங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் கடந்த 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்தது.
தனிப்பெரும்பான்மையுடன் 2ம் முறை பிரதமராகிறார்... நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து!
பங்குச்சந்தை
கருத்துக்கணிப்புகளின் முடிவுகளால் பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கருத்துக்கணிப்பு முடிவுகள் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.
சாணக்யா
டுடே சாணக்யா, பாஜக கூட்டணி 350 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களையும் இதர கட்சிகள் 97 இடங்களையும் கைப்பற்றும் என்றும் சாணக்யா தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தது.
2014 கருத்துக்கணிப்பு
கடந்த 2014- தேர்தலில் டுடே சாணக்யாவின் கருத்து கணிப்பின்படியே தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக கூட்டணி 340 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என சாணக்யா கருத்துக்கணிப்பு கூறியிருந்தது.
தற்போதைய நிலவரம்
பாஜக தனித்து 300 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தனித்து 55 இடங்களில் வெற்றி பெரும் என்றும் கூறியிருந்தது சாணக்யா. இந்நிலையில் பாஜக தனித்து 300 இடங்களில் முன்னணியில் உள்ளது.
எதிர்பார்ப்பு
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 341 இடங்களை கைப்பற்றியது. 2014 மக்களவை தேர்தலில் சாணக்கியாவின் கருத்துக்கணிப்பு நிஜமான நிலையில் இந்த தேர்தலில் சாணக்யாவின் கருத்துக்கணிப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
வென்றது சாணக்யா சொல்
இந்நிலையில் இந்த முறையும் சாணக்கியாவின் கருத்துக்கணிப்பு ஓரிரு இடங்கள் வித்தியாசத்தில் உண்மையாகியுள்ளது. பாஜக கூட்டணி 347 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.