வேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு
சென்னை: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், அவரது வெற்றியை செல்லாது அறிவிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை சௌந்திரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிட்டார்.
ஸ்டெர்லைட் விவகாரம் உள்பட பல்வேறு விவாகரத்தில் கடுமையான விமர்சனங்களை இருவருமே முன்வைத்ததால் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது.
இதனிடையே தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி சுமார் 5லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை, சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றதோடு சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த தேர்தலில் திமுக எம்பி கனிமொழி பணபலத்தை இறக்கி வெற்றி பெற்றதாக தமிழிசை சௌந்திரராஜன் தேர்தல் முடிந்த போதே குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழிசை தாக்கல் செய்த மனுவில், திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், அதனைச் சுட்டிக்காட்டிய பின்னரும் கூட புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார் அத்துடன் ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் குற்றம்சாட்டி உள்ளார்.