இன்று கொட்டப்போகுது கனமழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா
இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை: இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கலுக்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், வறண்ட வானிலையே கடந்த வாரமாக நிலவி வந்தது. இந்தச் சூழலில் வங்கக் கடலில் உருவான தாழ்வு நிலை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
இருப்பினும், இந்த மழையால் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மூழ்கும் சூழல் உருவானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
2015 சென்னை வெள்ளம் நினைவிருக்கா? பசிபிக் கடலில் உருவாகும் புதிய 'எல் நினோ'.. ஏன் முக்கியம்?
இன்று வானிலை
மேலும், ராமநாதபுர மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் அங்கு விவசாயிகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதற்கிடையே இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விடுமுறை
இதனிடையே கனமழை காரணமாகக் காரைக்காலில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதேபோல தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழையால் நாகை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
நாளைய தினம் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பிப்.5, பிப்.6 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
மீனவர்கள்
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் நாளை குமரிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.