சில ஊர்களில் சுள்ளென வெயில்..பல மாவட்டங்களில் ஜில்லென வெளுத்து வாங்கப்போகும் கனமழை
சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல ஊர்களில் சுள்ளென்று வெயில் பட்டையை கிளப்பும் நிலையில் வானிலை ஆய்வு மையம் குளுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அணைகள் நிரம்பியுள்ளன. தென்மேற்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்து வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. கும்பகோணம் 10 செமீ, திருவாரூர், திருவிடைமருதூர் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. வேலூர், பாடாலூரில் தலா 6 செமீ, லப்பைக்குடிகாடு, லக்கூர், வேளாங்கண்ணி பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை அயனாவரம் நந்தனம், நெய்வாசல் தென்பாதி, தஞ்சாவூரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், சாத்தான்குளம், செந்துறை, ஹரூர், சென்னை நுங்கம்பாக்கம் கொடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 1 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை.. வெள்ள பாதிப்பை தடுக்க என்ன செய்யலாம்? செப்.26ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
வானிலை ஆய்வு மையம்
அதே நேரத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மிதமான மழை
29,30ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெயில் சுடும்
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.