உலக கணினி எழுத்தறிவு தினம் வருகிறது.. ஆனால் அதை கற்பிக்கும் ஆசிரியர்களின் வேதனையைப் பாருங்க!
சென்னை: உலக கணினி எழுத்தறிவு தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளின் நிலை தலைகீழாக உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலு கூறியிருப்பதாவது : அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், நாங்கள் படித்த பி.எட்., படிப்பு இன்று எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் (60,000) பி.எட்., படித்தோம். ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் கணினி கல்விக்கு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 60,000 பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இவர்களைச் சார்ந்த 60,000 குடும்பங்களும் இன்று தவித்து வருகின்றன.
எட்டு வருடங்களுக்கும் மேலாக, பி.எட்., கணினி பட்டதாரிகளுக்காகவும், பள்ளி கல்வித்துறையில் கணினி அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தாதது வேதனையளிக்கிறது.
வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். இன்று பூலோகத்தின் ஒவ்வொரு அசைவும் கணினியால் தீர்மானிக்கப்படுகிறது.
உலகமே கணினியை கொண்டாடுகிறது, ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் போதிய கணினி ஆசிரியர்களின்றி, உரிய வழிகாட்டுதலின்றி பொதுத்தேர்வை எழுதச் செல்லும் எமது மாணவச் செல்வங்களை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது என்று தெரிவித்தார்.
டிசம்பர் 2ம் தேதி உலக கணினி எழுத்தறிவு தினம் என்பது நினைவிருக்கலாம்.