சென்னையில் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து... பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்..!
சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கந்தன்சாவடியை அடுத்த காரபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தால் தயாரிப்புகள், இயந்திரங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு தீயணைப்புத்துறையினர் செல்வதற்குள் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் நாசமாகியது. இதனிடையே 3 மணி நேரமாக போராடி தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து காரணமாக காரப்பாக்கம் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் மின்சாரம் கசிவா அல்லது மர்மநபர்களின் சதிச்செயலா என்பது பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. பொதுவாக தொழிற்சாலைகளில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்பட்டிருக்கும். இது போன்று இந்த தொழிற்சாலையில் செய்யப்பட்டிருந்ததா என்பது பற்றியும் போலீஸ் விசாரித்து வருகிறது.
தீ முழுவதும் அணைக்கப்பட்டுள்ள நிலையில் சேதம் குறித்து மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தீயில் கருகி எரிந்த பொருட்களின் மதிப்பு பல கோடிகளில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.