தக்காளி விலை மீண்டும் உயர்வு... முருங்கைக்காயும் விலை உச்சத்தில் - இனி வெறும் புளி ரசம்தான்
தக்காளி விலை கிலோ 100 ரூபாயாக விற்பனையாகிறது. காய்கறிகளின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னை: தக்காளி விலை மீண்டும் ஒரு கிலோ 100 ரூபாய் ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ பீன்ஸ் 85 ரூபாய்க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாய்க்கும் விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். வீட்டு பட்ஜெட் உயரத் தொடங்கியுள்ளதால் தக்காளி, காய்கறிகள் இல்லாம் வெறும் புளி ரசமும் புளிக்குழம்பும் வைத்து சமாளிக்கத் தொடங்கியுள்ளனர் இல்லத்தரசிகள்.
கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் கடந்த வாரங்களில் தக்காளி விலை 150 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. காய்கறிகளும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. இல்லத்தரசிகள் கவலைப்பட்ட நிலையில் தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.
பண்ணை பசுமைக்கடைகளில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறைக் கடைகளில் தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 70 ரூபாய், 80 ரூபாய் என உயர்ந்து தற்போது ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை எட்டியுள்ளது.
பெரிய வெங்காயம் விலை 35 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. அவரைக்காய் விலை 90 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு வந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 85 ரூபாய்க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முருங்கைக் காய் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மழை காலங்களில் எப்போதுமே காய்கறிகள் விலை உயர்வாகத்தான் இருக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் பொதுவாக பெரும்பாலோனோர் சைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள் இதன் காரணமாகவும் காய்கறிகள் அதிகம் விலை உயரும். இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் மழை வெள்ளம் காரணமாக பயிர்கள் அனைத்தும் அழுகி விட்டன. காய்கறிகள், தக்காளி வரத்து குறைவினால் விலை அதிகம் உயர்ந்துள்ளது.
500 ரூபாய் கடைக்குக் கொண்டு சென்றால் குறைவான அளவே காய்கறிகளை வாங்க முடிகிறது என்பது இல்லத்தரசிகளின் கவலையாகும். எனவே தக்காளி, காய்கறிகள் அதிகம் சேர்க்காத வற்றல் குழம்பு, புளி குழம்பு, லெமன் ரைஸ், புளி சாதம், தேங்காய் சாதம், என பலவித சாதங்களை சமைக்க ஆரம்பித்துள்ளனர். விதவிதமான சட்னிகளை வைத்து சமாளித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இருக்கவே இருக்கு புளி, மிளகு ரசம் என்பதும் இல்லத்தரசிகளின் கருத்தாக உள்ளது.