நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்… 8,61,107 பேர் எழுதுகின்றனர்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க உள்ளன.
நாளை தொடங்கி, மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறும் 12-ம் வகுப்பு தேர்வை, 8,61,107 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 150 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 19-ல் முடிவுகள்
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் 19-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடையும் நிலையில் ஏப்ரல் 19-ல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
எண்கள் அறிவிப்பு
மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் , பொதுமக்கள் தங்கள் புகார்களை, கருத்துகளை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120, 9385494125 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
600 மதிப்பெண்கள்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் இதுவரை பாடம் ஒன்றுக்கு 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
செல்போனுக்கு தடை
அதேபோன்று, மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.