மே 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வரை நாளை சந்திக்கிறது மருத்துவ குழு
சென்னை: மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். லாக்டவுன் வரும் 31ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஐந்தாம் கட்ட ஊரங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
Recommended Video
மார்ச் 25ம் தேதி தொடங்கிய நாடு தழுவி லாக்டவுன் 4முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 31ம் தேதியுடன் லாக்டவுன் முடிய உள்ளது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்பட சில மாவட்டங்களில கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு ஊரடங்கு தளர்வு காரணமாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்த இதை தவிர வேறு வழியில்லை என்பதால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுடன் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது 5ம் கட்டமாக லாக்டவுனை தமிழகத்தில் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளார்.
இந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி
இந்த குழுவிடம் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம், கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. இந்த குழுவுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வரிடம் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக் குழு செய்தியாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு ஒரேடியாக லாக்டவுனை தளர்த்த கூடாது என்றும் படிப்படியாகவே தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.