நாளை அதிகாலை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
Recommended Video
சென்னை: லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்கிழமை) அதிகாலை தமிழகம் திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறுவதற்காகவும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28-ம் தேதி லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
இந்நிலையில் 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் வழியாக நாளை அதிகாலை 2.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக அரசின் செய்தித்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், வெளிநாடுகளில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாதக சூழலை எடுத்துரைத்து முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை பார்வையிட்டு, அதை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி முதல்வர் கேட்டறிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் முதல்வரை வரவேற்க அமைச்சர்கள், எம்.எ.ஏ.க்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.