நாளை தேர்தல் முடிவு.. சென்னையில் கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு !
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சென்னையில் கட்சி அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக அல்லாத அரசு- தேவகவுடா, குமராசாமியுடன் சந்திரபாபு நாயுடு தீவிர ஆலோசனை
விஸ்வநாதன் ஆய்வு
இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று ஆய்வு செய்தார்.
5000 போலீசார் பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மட்டும் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். சென்னையில் உள்ள 3 வாக்கும் எண்ணும் மையங்களில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மக்களுக்கு பிரச்சனை
மற்ற பகுதிகளில் 2,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், மக்களுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
தயாராக உள்ளோம்
ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு கமிஷனர் ஏகே விஸ்வநாதன் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள்
இதனிடையே வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.