நாளை கிராம சபை கூட்டங்கள்.. நல்ல வாய்ப்பை தவற விட்டு விடாதீர்.! மக்களுக்கு டிடிவி கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் புதிதாக மேலும் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மேலும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என கூறி, நாளை நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் வறட்சியை அதிகப்படுத்தும் திட்டங்களான ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றுக்கு தடை விதித்து, அந்தந்த கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஜினிக்காக திமுகவை உடைக்க முயற்சித்த கராத்தே... காங். நடவடிக்கை பாய்ந்ததன் பரபர பின்னணி!
ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு, சட்டப்பூர்வ வலிமை உள்ளது. அந்தந்த கிராம ஊராட்சிகளின் நலன்களுக்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை செயல்படுத்துவதற்கான அதிகாரம் கிராம சபைகளுக்கு உண்டு.
நீதிமன்றங்களை தவிர வேறு யாருக்கும் கிராம சபை தீர்மானங்களில் தலையிடுகிற உரிமையில்லை. எனவே சட்டம் நமக்கு வழங்கியுள்ள ஜனநாயக வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, மக்கள் விரோத அரசுகள் முன்வைக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், அணுக்கழிவு சேகரிப்பு மையம் உட்பட மக்களுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை எளிதாக தடுத்து நிறுத்தி வைக்க முடியும்.
இதன் மூலம் நம்முடைய வாழ்வையும், எதிர்கால தலைமுறையையும் காப்பாற்றிட முடியும். நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளும் ஜனநாயக வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தால் தவியாய் தவித்து கொண்டிருக்கும் தமிழகத்தில், இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் வறட்சி அதிகமாகி விடும். விளை நிலங்களை அழித்து எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் புதிது புதிதாக அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார்கள்.
இதற்கான மக்கள் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி, கிராம சபை என்னும் ஜனநாயக வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவோம். எந்தெந்த கிராமங்களின் எல்லைகளுக்குள், என்னென்ன மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன என்பதை உடனடியாக அறிந்து, அவற்றின் பெயரை குறிப்பிட்டு அவற்றை தடை செய்யும் தீர்மானங்களை நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றுங்கள்.
ஊராட்சியின் மொத்த வாக்காளர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று, இந்த தீர்மானங்களை நிறைவேற்றினால் தான் அவை சட்டப்படி செல்லும் என்பதையும் கவனத்தில் வையுங்கள். ஆனால் அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் இந்த மாதிரியான தீர்மானங்களை நிறைவேற்றவிடாமல் ஏதோ ஒரு வகையில் தடையை ஏற்படுத்துவார்கள்.
இந்த தீர்மானம் அவர்களுக்கும், அவர்களது சந்ததியினருக்கும் சேர்த்து தான் என சொல்லி புரிய வைத்து நெஞ்சுறுதியோடு எதிர்கொள்ளுங்கள் என அறிக்கையில் விளக்கமாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.