நிவர் புயல் - நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிப்பு : முதல்வர்
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அது போல் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறிவிட்டது. இந்த நிலையில் புயலின் தன்மை குறித்து அறிய சேப்பாக்கத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.
அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரும் வந்திருந்தார். அப்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நிவர் புயல்.. முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்- உதவிக்கரம் நீட்ட காத்திருக்கிறோம்! – சீமான்
நாளை பொது விடுமுறை
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. நிலைமைக் கேற்ப விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும். மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
தீவிர புயல்
நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெறுவதால் புயல் கரையைக் கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரி
கடலோர மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பொழிவை பொருத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.