அத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா?
சென்னை: காஞ்சிபுரத்தில், 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் சயனிக்க சென்றுள்ளார். இதுவரை, அத்திவரதரை 1 கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளதாகவும், காணிக்கையாக 7 கோடி ரூபாய் வசூலானதாகவும் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா இன்று அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி கப்பிகுளம் ஜெ. பிரபாகர் பேஸ்புக் பதிவில் ஒரு தகவல் போடப்பட்டுள்ளது. அது என்ன என்று பாருங்கள்.
ரஜினிக்காந்த், விஜயகாந்த், நயன்தாரா, ஓ.பன்னீர்செல்வம், தேவகவுடா, குமாரசாமி, ராஜாத்தியம்மாள், துர்கா ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள், ரவுடி வரிச்சியூர் செல்வம் போன்ற வி.வி.ஐ.பி.கள், பாஸ் இல்லாமல் விஐபி வழியில் சென்றவர்கள், பணம் இல்லாமல் சாதா தரிசனம் செய்தவர்கள், அத்தனை பேருமே நிச்சயம் காணிக்கை போட்டிருப்பார்கள்.
காணிக்கை போடுவதும், பிரசாதம் வாங்குவதும், நமது பழக்கம், நிச்சயம் நடந்திருக்கும். 1 கோடியே 7500 பக்தர்கள், ஒரு ஆளுக்கு குறைந்தது 10 ரூபாய் காணிக்கை போட்டிருந்தால் கூட, மொத்தம் 10 கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். ஒரு சிலர் 100 ரூபாய் போட்டிருக்கலாம், 500, 2000 ரூபாய் போட்டிருக்கலாம். ஓபிஎஸ் மூன்று முறை தரிசனம் செய்தார்.
விஜபி பக்தர்கள் பத்தாயிரம், இருபதாயிரம் என்று காணிக்கை போட்டிருக்கலாம். திருப்பதி போன்று சிலர் ஒரு லட்சம் கூட காணிக்கை போட்டிருக்கலாம். 40 ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தரிசனம் அல்லவா. ஆனால், சராசரியாக 7 ரூபாய் மட்டும் கணக்கில் காட்டியுள்ளனர். அதாவது 1 கோடி பக்தர்கள் தரிசனம் செய்த இடத்தில் 7 கோடி ரூபாய் மட்டும் காணிக்கை கிடைத்துள்ளதாம்.
இவ்வாறு செல்கிறது அந்த பேஸ்புக் தகவல்.