சட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு
சென்னை: திமுக விருப்ப மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், 7000 பேர் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் மார்ச் 10ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். திமுக சார்பில் கடந்த 17ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.
திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தனர். அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி, கடந்த சில நாட்களுக்கு முன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.
தி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன!
விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை விருப்ப மனு அளித்தார்.
இன்று மாலையுடன் திமுக சார்பிலான விருப்ப மனு விநியோகம் நிறைவடைந்தது. மொத்தமாக 8,500 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் 7,000 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.