ராஜ்யசபா சீட்.. அதிமுகவில் பெரும் குழப்படி.. கேபி முனுசாமிக்கு சான்ஸே இல்லையாம்!
அதிமுகவில் ராஜ்ய சபா சீட் யாருக்கு கிடைக்கும் என்பதில் போட்டி எழுந்துள்ளது
சென்னை: ராஜ்ய சபா சீட்டை வாங்குவதற்காக அதிமுகவில் எப்படி எப்படியோ முயன்ற கேபி முனுசாமிக்கு தோல்வி தான் கிடைக்கும் போல தெரிகிறது.
அதிமுக தரப்பில் 3 ராஜ்ய சபா எம்பிக்களை தேர்ந்தெடுக்கும் சூழல் உள்ளது. இதில் ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின்படி அன்புமணி ராமதாசுக்கு செல்ல உள்ளதாகவும், கூட்டணி கட்சியான பாஜகவோ தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் அதிமுகவுக்கு மிச்சமுள்ளது ஒரே ஒரு சீட்தான்.
இந்த ஒரு சீட்டுக்கு அதிமுகவில் ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டு வருகின்றன. கேபி முனுசாமி, தம்பிதுரை, மைத்ரேயன், கோகுல இந்திரா என லிஸ்ட் பெரிசாகி வருகிறது. இதில் கேபி முனுசாமி பெயர் அதிகமாக பேசப்பட்டது. இதற்கு காரணம், கட்சியின் மூத்த தலைவர் என்பது மட்டுமில்லாமல், ஓபிஎஸ்சுக்கு பக்க பலமாக இருப்பவர்.
ராஜ்ய சபா
ஆனால் ஓபிஎஸ்-இபிஸ் இடையே நிறைய குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையை குழப்பியது கேபி முனுசாமி என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. இந்த சமயத்தில்தான், அதாவது ராஜ்ய சபா சீட் விவகாரம் எழுந்தபோதிலிருந்து, ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்தவர், தடாலடியாக எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக மாறி செயல்படுவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
உட்கட்சி குழப்பம்
இப்போது விஷயம் என்னவென்றால், என்னதான் தனக்கு சாதகமாக முனுசாமி மாறினாலும், அவரை டெல்லிக்கு அனுப்ப எடப்பாடி விரும்பமாட்டார் என்றே சொல்கிறார்கள். அரசியல் அனுபவம் இருந்தாலும், கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு அடித்தளமிட்டவர்களில் முனுசாமியும் ஒருவர் என்பதால், டெல்லிக்கு அனுப்பினால் என்னாகுமோ என்ற எண்ணம் எடப்பாடி தரப்புக்கு எழுந்துள்ளதாகவும் தெரிகிறது.
தம்பிதுரை
இதனால் அவரது பெயரை எடப்பாடி பரிசீலிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மேலும் தனக்கு எப்போதுமே விசுவாசமான தம்பிதுரைக்கு சீட் தந்தால், ஓரளவு தெம்பாக இருக்கலாம் என்று எடப்பாடியார் கணக்கு போடுகிறாராம்.
எதிர்பார்ப்பு
ஆனால் ஓபிஎஸ் தரப்போ கேபி முனுசாமிக்கு சீட் தந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறதாம். ஆளுக்கு ஒருவரை பரிசீலிப்பதால், யாருக்குதான் அந்த ஒரு சீட் போக போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.