2 வாரிசுகள்.. ஒரே தொகுதியில்.. திகுதிகு கொதிப்பில் தென்சென்னை தேர்தல் களம்
தென்சென்னையில் ஜெயவர்தன் - தமிழச்சி தங்கபாண்டியன் நேரடியாக மோத உள்ளனர்.
Recommended Video
சென்னை: தென்சென்னையில் யார்தான் வெற்றி பெறுவார்களோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது.
சென்னையின் 3 தொகுதிகளில் இந்த தென்சென்னையில் தான் அதிக தலைவர்கள் போட்டியிட விரும்பினார்கள். எம்பி மைத்ரேயன் கேட்டு பார்த்தார்.. அதிமுக தரவில்லை.. அதேபோல தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டுப்பார்த்தார்... முடியவே முடியாது என்று சொல்லி விட்டனர்.
குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார்தான்! இவரது மகனை இங்கே நிறுத்துவதாக ஏற்கனவே முடிவு செய்து, அதற்கான தீவிர பணியில் எப்போதோ இறங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.
சொந்த செல்வாக்கு
அதன்படியே தென்சென்னையில் ஜெயவர்தன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெயவர்தன் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். தற்போதைய எம்பியும்கூட. அப்பாவோ தமிழக அமைச்சர்! சொந்த செல்வாக்கு, கட்சி செல்வாக்கு என இத்தனையும் சாதகமான விஷயங்களாக கொட்டிக்கிடக்கிறது. ஆனாலும் இவர் ஜெயிப்பதில் சிக்கல் உள்ளதாம். ஏன் என்றால், அதிமுக-பாஜக கூட்டணியே காரணம் என்று சொல்லப்படுகிறது.
சிறுபான்மை ஓட்டுக்கள்
இதனால் மத ரீதியான ஒரு பிம்பம் அதிமுக மேல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சிறுபான்மை ஓட்டுக்கள் 30 சதவீதம் அதிமுகவுக்கு போக வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவே அதிமுக தனித்து நின்றிருந்தால், ஜெயவர்தனின் ஜெயம் நிச்சயமே என்று சொல்லப்படுகிறது.
தமிழச்சி தங்கபாண்டியன்
அதே சமயம் திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கும் சென்னைக்கும் சம்பந்தம் இல்லை. இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது அப்பாவை மனதில் வைத்தே இந்த தொகுதி வழங்கப்பட்டுள்ளது என்றாலும் தனிப்பட்ட செல்வாக்கையும் இவர் ஓரளவு பெற்றுள்ளார். திமுக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் இவர் உள்ளார். பன்முக திறமைசாலி. கல்லூரி பேராசிரியாய இருந்தவர். பல நூல்களை எழுதி உள்ளார். திமுகவை பொறுத்தவரை தமிழச்சி தங்கபாண்டியனை தவிர பெரிய ஆப்ஷன்கள் தென்சென்னையில் எழவில்லை.
சப்போர்ட் அதிகம்
இந்த அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவருமே கட்சி தலைவர்களின் வாரிசுகள், புதிய அறிமுகம் மக்களிடையே தேவையில்லை. ஜெயவர்தனாக இருந்தாலும் சரி, தமிழச்சி தங்கபாண்டியனாக இருந்தாலும் சரி.. இருவருக்கும் கட்சி சப்போர்ட் நிறையவே இருக்கிறது. இருந்தாலும் சிறுபான்மை மற்றும் மீனவ மக்களின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களுக்குதான் இங்கு வெற்றி வாய்ப்பு என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது!