காணும் பொங்கல்.. சென்னையில் சுற்றுலா தலங்களில் அலை மோதியது மக்கள் கூட்டம்
சென்னை: தமிழகத்தில் காணும் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் அதிக அளவில் திரண்டனர். கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து ஓடி விளையாடி மகிழ்ந்தனர்.
மெரினாவில் ராட்டினம் உள்பட விளையாட்டு உபகரணங்களும், குதிரை சவாரியும் ஓய்வின்றி நடைபெற்றது. கடலில் குளிக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. தடுப்புகளை அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கேமரா
அசம்பாவிதங்களை தடுக்க 140-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் ஈடுபட்டிருந்தனர். ட்ரோன் கேமரா, கண்காணிப்பு கேமரா மூலம் மக்கள் கூடும் இடங்கள் கண்காணிக்கப்பட்டன.
உற்சாகம்
மெரினாவை போல பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் திரண்டனர். கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. விலங்குகள் அருகில் நின்று பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த ‘3-டி' தொழில்நுட்ப அரங்கை பார்வையிட்டு உற்சாகத்தில் திளைத்தனர்.
கடற்கரை பகுதிகள்
திரையரங்குகள், வணிக வளாகங்கள், தனியார் பொழுதுபோக்கு தலங்களிலும் மக்கள் அதிகளவில் கூடினார்கள். காணும் பொங்கல் கொண்டாட்டம் காரணமாக கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலாதலங்கள் களை கட்டியது.
பொதுமக்கள்
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிலும் மக்கள் கூட்டம் இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் வன உயிரியியல் பூங்கா கூண்டுக்குள் இருக்கும் விலங்குகள் 2 பெரிய அகன்ற திரைகள் மூலமும் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டன.