என்னது... வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்க்க காசு கொடுக்கணுமா?
Recommended Video
சென்னை: மாமல்லபுரத்தின் முக்கிய புராதன அடையாளமான வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்க்க இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மாமல்லபுரம் தமிழகத்தின் முக்கியமான வரலாற்று அடையாளம். சமீபத்தில் இங்கு சீன அதிபர் ஜின்பிங் வந்து சிற்பங்களைப் பார்வையிட்டு பல்லவர்களின் கலை நயத்தையும், தமிழக வரலாற்று தொன்மையையும் வியந்து பாராட்டினார். ஜின்பிங் வந்து போனதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் மாமல்லபுரம் பிரபலமாகி விட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள சில வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். கடற்கரைக் கோவில், கலங்கரை விளக்கம் போன்றவை அதில் சில. இந்த வரிசையில் தற்போது வெண்ணெய் உருண்டை பாறையும் இணைந்துள்ளது.
இந்த பாறைக்கு முன்பு நின்றுதான் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த பாறையை இதுவரை சுற்றுலாப் பயணிகள் இலவசமாகவே பார்த்து வந்தனர். ஆனால் இன்று முதல் அதற்கு ரூ. 40 கட்டணம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜின்பிங் வந்து போன காரணத்தால் இந்த கட்டண உயர்வா என்று தெரியவில்லை. இருந்தாலும் மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை.