எங்கள் தலைவரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை... தமிழக அரசு மீது டி.ஆர். பாலு பாய்ச்சல்
சென்னை: திமுகவை பற்றியோ மு.க.ஸ்டாலினை பற்றியோ பேச அதிமுக ஆட்சிக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த தகுதியும் இல்லை என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
கொரோனா விவகாரத்தில் திமுக முன்வைத்த கோரிக்கைகளை தான் காலதாமதமாக அரசு செய்து வருகிறதே தவிர, ஆட்சியாளர்கள் சுயமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என சாடியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பைபர் ஆப்டிக் கேபிள் வழங்கியதில் முறைகேடு.. ஆர் எஸ் பாரதி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
டி.ஆர்.பாலு பாய்ச்சல்
"கொரோனா நோய் சிகிச்சைக்கு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்" என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஜனவரி 7-ம் தேதியே எழுதிய கடிதத்தைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு இன்றுவரை முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது யார்?சாட்சாத் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், முதலமைச்சரும்தான் என்பதை மறுக்க முடியுமா?"அனைவரும் முகக்கவசம் போட வேண்டிய அவசியமில்லை" என்று கொடுத்தது யார்? திரு. விஜயபாஸ்கர்தான்!
சுய முடிவில்லை
எங்கள் தலைவர் துவக்கத்திலிருந்து- அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு- அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். எங்கள் தலைவர் வைத்த கோரிக்கைகளையே ஒவ்வொன்றாக "காலதாமதமாக" இன்றைக்கு அ.தி.மு.க. அரசு செய்து வருகிறதே தவிர- சுயமாக ஒரு முடிவையும் இதுவரை எடுத்து அறிவிக்கவில்லை. நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுடனான காணொலிச் சந்திப்பில் அரசின் தோல்விகளை அடுக்கடுக்காக எங்கள் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் செய்தது அதிமுக
திரும்பவும் சொல்கிறேன்; சட்டமன்றத்தைத் தொடர்ந்து நடத்தியும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமலும், "ஒன்றிணைவோம் வா" நிகழ்ச்சியின் மூலம் கொடுத்த மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், அரசியல் செய்தது அ.தி.மு.க. ஆட்சிதான். கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்த கழகத்தினரைப் பொய் வழக்குப் போட்டு கைது செய்து அரசியல் பண்ணியது அ.தி.மு.க. ஆட்சிதான்.
மறுபடியும் ஊரடங்கு
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் "மறுபடியும்" முழு ஊரடங்கு போடும் அளவிற்கு- படுதோல்வி அடைந்து- நிராயுதபாணிகளாக நிற்பது அ.தி.மு.க. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அவருக்குத் தலைவராக இருக்கும் மாநில பேரிடர் மேலாண்மை தலைவர் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும்தான்!
எள் அளவும்
முழுக்க முழுக்க அரசியல் பண்ணிவிட்டு- அரசு கஜானாவை கொரோனா பேரிடரிலும் சுரண்டிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு தி.மு.க.,வைப் பார்த்தோ, தி.மு.க. தலைவர் எங்கள் தளபதியைப் பார்த்தோ "அரசியல் செய்கிறார்கள்" என்று சொல்லும் தகுதி எள் அளவு அல்ல- எள் முனையளவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.