மத்திய அமைச்சராகிய நீங்களே வாக்குறுதியை மீறலாமா...? ரவிசங்கர் பிரசாத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம்..!
சென்னை: தபால் துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மத்திய அமைச்சராகிய நீங்களே மீறலாமா எனவும் அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன்... விவசாய கடன் தள்ளுபடி... மு.க.ஸ்டாலின் உறுதி..!..!
கணக்காளர்கள்
இந்திய அஞ்சல் துறையின், தமிழ் நாட்டு பிரிவிற்கு, கணக்காளர்களை துறைத்தேர்வு மூலம் தேர்வு செய்ய சென்னை மண்டல தலைமை தபால் துறை அதிகாரியினால் கடந்த ஜனவரி 2021 நான்காம் தேதியன்று வெளியிடப்பட்ட பொது அறிவிக்கையில் பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்வில், ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னாச்சு வாக்குறுதி
தாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாகவுள்ளது கண்டு, தமிழக மக்கள் முழுவதுமாக அதிர்ச்சியடைந்துள்ளனர். அன்று அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தபோது, நடந்துவிட்ட தவறுதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறவிருந்த தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தீர்கள். மேலும், நாடாளுமன்றத்தில் நடந்த கூச்சல் குழப்பங்களுக்கு இடையில், நீங்கள் (ரவி சங்கர் பிரசாத்) தமிழ் மொழி உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் விரைவில் தேர்வு நடத்தப்படும் என உறுதியளித்தீர்கள்.
அமைச்சர் பேச்சு
''திரு. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, தமிழ் மொழி உள்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் மிகுந்த மரியாதையை அளித்து போற்றுகிறது, என்பதை இந்திய நாட்டு மக்களுக்கு, உங்கள் மூலமாகவும், இந்த நாடாளுமன்றத்தில் வாயிலாகவும் உறுதி கூறுகிறேன் எனவும், நான் தமிழ் நாட்டின் பொறுப்பாளாராக நானே செயல்பட்ட போதும், தமிழ் மொழி உள்பட மற்ற மொழிகளின் அன்பையும் மற்றும் ஆழத்தையும், அறிந்துள்ளேன். எனவே, அனைத்து மொழிகளுக்கான இந்திய அரசின் உறுதிப்பாடு முழுமையானதும் மற்றும் உளப்பூர்வமானதுமாகும்''. எனத் தெரிவித்தீர்கள்.
ஏமாற்றம்
மேலும், மக்களாட்சியின் மிகப்பெரிய தூண்களான, நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய இரண்டிலும் அளிக்கப்பட்ட உறுதிமொழி வேண்டுமென்றே, அஞ்சல் துறையினரால் முழுமையாக மீறப்பட்டுள்ளது, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. அஞ்சல் துறையில் கணக்காளர்களுக்காக நடைபெறவுள்ள தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி வாயிலாக மட்டுமே நடைபெறும் என்பது இலட்சகணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்வில் இது மிகப் பெரிய பேரிடியாகவும் தாக்கியுள்ளது.
புதிய அறிவிக்கை
எனவே, கடந்த சனவரி நான்காம் தேதியன்று அஞ்சல் துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழ்மொழி வாயிலாகவும் கணக்காளர்களுக்கான தேர்வு நடத்தபடுமென புதிய அறிவிக்கை வெளியிட்டு, தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.