ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு பாதிப்பே இல்லை... அமைச்சர் கே.சி.வீரமணி பதில்
சென்னை: ஜி.எஸ்.டி., யால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில், வணிகவரித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஜி.எஸ்.டி.யால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, தமிழ்நாட்டில், ஜி.எஸ்.டி வரி நடைமுறையில், 10 லட்சம் வணிகர்கள் இணைந்துள்ளதாக கூறினார்.
பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், வணிகர்கள் நிம்மதியாகவும், வளமாகவும் வணிகம் செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஜி.எஸ்.டி.,யை சிறப்பாக கையாளும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் அமைச்சர் வீரமணி கூறினார்.
பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிறு வணிகர்களை பாதுகாக்கும் நோக்கோடு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பணபரிவர்தனை செய்யும் வணிகர்கள் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை என்றார்.
முன்னதாக, ஜுன் மாதம் 99 ஆயிரத்து 939 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே மாதம் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 350 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக 18 ஆயிரத்து 366 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 25 ஆயிரத்து 343 கோடி ரூபாயும், இறக்குமதி வரி உள்பட ஒருங்கிணைந்த வரியாக 47 ஆயிரத்து 772 கோடி ரூபாயும் கூடுதல் வரியாக 8457 கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.