ஹெல்மட் போடலை.. 1 செகண்டுதான்.. எல்லாமே முடிஞ்சு போச்சு.. தலைநசுங்கி இறந்த எஸ்ஐ
சென்னை கத்திபாரா சாலை விபத்தில் போலீஸ் எஸ்ஐ பலி
Recommended Video
சென்னை: டியூட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த போலீஸ் எஸ்ஐ லாரி மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
தாம்பரம் சானிடோரியம் துர்கா நகரில் வசித்து வந்தவர் நடராஜ். 56 வயசு. இவர் பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
சென்னைக்கு இன்று குடியரசு தலைவர் வருகையால் சிறப்பு கூட்டம் இன்று காலை நந்தம்பாக்கத்தில் போலீசாருக்கு நடந்தது. இதில் பங்கேற்றுவிட்டு, 11.30 மணி அளவில் வீட்டுக்கு செல்ல பைக்கில் கிளம்பினார்.
லாரி
ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து ஏர்போர்ட் வழியாக செல்ல கத்திபாரா பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அதே திசையில் சிமெண்ட் கலவை செய்யும் கனரக லாரி ஒன்றும் வந்துகொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை முந்தி சென்ற லாரி, இடதுபுறமாக பூந்தமல்லி வளைவில் திரும்பியது.
கத்திபாரா மேம்பாலம்
ஆனால் அந்த வழியில் சென்ற நடராஜனை கவனிக்காமல், லாரி வேகமாக அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். கத்திபாரா மேம்பாலத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.
வழக்கு பதிவு
விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியது, உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெல்மட்
இதையடுத்து போலீசார் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நடராஜ், ஹெல்மட் வைத்திருந்தும் அதை அணியாமல் போயுள்ளதும், வெறும் தொப்பி மட்டுமே அணிந்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. ஹெல்மட் போடாததால்தான் லாரி ஏறியதில் தலை நசுங்கியதுடன், வயிற்று பகுதியும் மோசமாக காயமடைந்துள்ளது.
அதிர்ச்சி
உயிரிழந்த நடராஜனுக்கு இன்னும் 2 வருஷங்களே பணி காலம் இருக்கிறது. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார், மகன் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். எஸ்ஐ நடராஜனின் உயிரிழப்பு காவல்துறைக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது