பொக்கே + பொக்கை வாயுடன் ஸ்டாலினை மு.க.வாழ்த்திய டிராபிக் ராமசாமி...!
திமுக தலைவருக்கு டிராபிக் ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ரொம்ப ரொம்ப எளிய மனிதர். ஆனால் கோபம் வந்தால் மனிதர் பின்னி எடுத்து விடுவார்.. அது ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் சரி.. பயப்படறதே இல்லை. அப்படி ஒரு கோபம்.. ஆனால் இந்த மனிதரால் எத்தனை எத்தனை நன்மைகள் மக்களுக்குத் தெரியுமா. .அவர்தான் டிராபிக் ராமசாமி.
டிராபிக் ராமசாமியை அவரது வீட்டில் பார்ப்பதை விட கோர்ட்டுகளில்தான் அதிகம் பார்க்கலாம். எப்போதும் கையில் கேஸ் கட்டுடன் நடமாடும் அவர் போன்ற ஒரு சமூக சேவகரைப் பார்ப்பது எல்லாம் இனிமேல் அரிதிலும் அரிதாகவே இருக்கும்.
டிராபிக் ராமசாமி திடீரென இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வருகை தந்தார். கையில் ஒரு பொக்கேவுடன், பொக்கை வாய்ச் சிரிப்புடன் வந்த அவரைப் பார்த்து திமுகவினருக்கு ஆச்சரியம். என்ன சார் இந்தப் பக்கம் என்று அவரிடம் கேட்டபோது திமுக தலைவரை வாழ்த்த வந்தேன் என்று கூறினார்.
கையில் பொக்கே
ஸ்டாலினுக்குத் தகவல் போக அவர் வெளியே வந்தபோது டிராபிக் ராமசாமியைச் சந்தித்தார். திமுக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்த வந்தேன் என்று ஸ்டாலினிடம் கூறிய ராமசாமி, கையில் பொக்கேவையும் கொடுத்து வாயார வாழ்த்தினார். ஸ்டாலினுக்கு ரொம்ப சந்தோஷம்.
வாழ்த்துக்கள்
மக்கள் அளித்த தீர்ப்பால் மகிழ்ந்துள்ள நிலையில் மக்களிடம் நல்ல பெயர் பெற்றவரான டிராபிக் ராமசாமியின் வாழ்த்தும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் போல, ஸ்டாலினும் ராமசாமியிடம் சந்தோஷமாக பேசி அவரது வாழ்த்துகளை வாங்கி வழியனுப்பி வைத்தார்.
தாத்தா ஸ்டிரிக்ட்
டிராபிக் ராமசாமி, ஸ்டாலினை வாழ்த்தி விட்டாரே என்று ஜாலியாக இருந்து விட முடியாது. நாளை திமுக ஆட்சி அமைந்து, அந்த ஆட்சியில் ஏதாவது போக்குவரத்து விதி மீறல் பஞ்சாயத்து வந்தால் முதல் ஆளாக டிராபிக் ராமசாமிதான் அதைக் கண்டிப்பார் என்பது கவனத்தில் இருக்கட்டும். ஏனென்றால் தாத்தா ரொம்ப ஸ்டிரிக்ட் இந்த விஷயத்தில்.
பலர் வாழ்த்து
இன்று டிராபிக் ராமசாமி மட்டுமில்லை. திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் பலரும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றனர். அவர்களில் முக்கியமானவர் தமிழச்சி தங்கப் பாண்டியன். ஸ்டாலினிடம் ஆசி பெற்ற கையோடு, கருணாநிதியின் சமாதிக்கும் சென்று சான்றிதழை வைத்து வணங்கி விட்டு வந்தார்.