இரு போலீஸாருக்கு இடையில் மோதல்.. சிசிடிவி மூலம் வெளிவந்த பரபரப்பு பின்னணி!
போலீசை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை: சென்னையில் ஒரு இன்ஸ்பெக்டருக்கும், போலீஸ்காரருக்கும் இடையிலான மோதலின் பின்னணி சிசிடிவி மூலம் அம்பலமாகி பெரும் தர்மசங்கடத்தை காவல்துறைக்கு கொடுத்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவலராக பணிபுரிபவர் தருமன். இவரது அம்மா போன வாரம் இறந்துவிட்டார். இந்நிலையில் அவரது வீட்டில் 16-வது நாள் காரியம் ஏற்பாடாகி கொண்டிருந்தது. இதற்கு லீவு வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் தருமன் வாக்கி டாக்கியில் கேட்டார்.
அதற்கு ரவிச்சந்திரனோ, "அம்மா செத்ததுக்கு வேணும்னா லீவு தரலாம், காரியத்துக்கு எல்லாம் தர முடியாது" என்று சொல்லி விட்டார்.
வாக்கி டாக்கி
இதனால் கோபப்பட்ட தருமன், கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து, "எங்க அம்மாவுக்கு 16-ம் நாள் காரியம், இன்ஸ்பெக்டர் லீவு தர மாட்டேங்கிறார், நான் என்ன செய்யட்டும்?" என்று வாக்கி டாக்கியிலேயே கேட்டிருக்கிறார். இது அத்தனை வாக்கி டாக்கிகளிலும் எதிரொலித்து விட்டது. இதனால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிசிடிவி கேமரா
இதையடுத்து அவரை கட்டுப்பாட்டு அறைக்கு வரவழைத்த உயர் அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர். குடிபோதையில் அவர் பேசியதாக கூறி சஸ்பெண்ட் செய்ததாக தெரிகிறது. ஆனால் தற்போது தருமன் மீதான குடிபோதை புகாரின் பின்னணி ஒரு சிசிடிவி கேமரா பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது.
பலத்த காயம்
தருமன் தன்னைப் பற்றி வாக்கி டாக்கியில் கூறியதைக் கேட்டு ஆத்திரத்தில் இருந்துள்ளார் ரவிச்சந்திரன். இதனால் தேனாம்பேட்டை பகுதியில் தருமனுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்துள்ளார் தருமன். அவரை நடு ரோட்டில் வைத்து பாய்ந்து பிடித்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தருமன், சாலையில் போய்க் கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்திற்கு முன்பாக போய் விழுந்தார். இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.
பலமான கோரிக்கை
மேலும் அவரை காரில் ஏற்றிய ரவிச்சந்திரன் கட்டாயப்படுத்தி அவரது வாயில் மது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் குடிபோதையில் இருந்ததாக மேலிடத்தில் கூறி சஸ்பெண்ட் செய்யவும் அவர் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இடமாற்றம்
இதையடுத்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்து பார்த்தபோது ரவிச்சந்திரன் செய்தது தவறு தெரிய வந்தது. இதையடுத்து தற்போது ரவிச்சந்திரனை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.