சென்னை டிராபிக்கில் சர், சர்ரென்று பைக் ஓட்டும் ஸ்விக்கி, ஜோமோட்டோ ஊழியர்கள்.. பாய்ந்தது வழக்கு
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறியதாக, செயலி வழி உணவு விநியோகிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது இதுவரை 2051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை முழுவதும் ஸ்விக்கி - ஜோமாட்டோ, உபர் ஈட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் உணவை விரைவாக கொண்டு செல்ல வாகன விதிமீறலில் ஈடுபட்டதால் போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாலைகளில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்குவதால் மெதுவாக செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அலங்காநல்லூர் பைனான்சியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 2-ஆவது மனைவியே கொன்றது அம்பலம்
உணவு டெலிவரி
இதற்கிடையே, நன்கு வளர்ச்சியடைந்த சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை அதிகம் காண முடிகிறது. அந்தந்த மாநிலங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கூட ஸ்விக்கி, ஜோமாட்டோ மற்றும் உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
உணவு ஆர்டர்
உணவு சமைக்காவிட்டால், செல்போனை எடுத்து வேண்டிய உணவை ஆர்டர் மட்டும் செய்து விட்டால் போதும். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கே உணவு தேடி வந்து விடும். வீடுகள் மட்டுமல்லாது அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சுட சுட டெலிவரி
வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில், உணவை சுட சுட டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, பைக்குகளில் அவர்கள் மின்னல் வேகத்தில் பறப்பதை சாலைகளில் நீங்கள் கண் கூடாக பார்த்திருக்க கூடும். அதே நேரம், உணவை வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகள் எதையும் அவர்கள் கடைபிடிப்பதில்லை என போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
2051 பேர் மீது வழக்குப்பதிவு
இந்தநிலையில், உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் 2051 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம், தொடர் விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து செயலி வழி உணவு விநியோகிக்கும் நிறுவன மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.