தம்மாத்தூண்டு மழையைத் தாங்க முடியாத டிரான்ஸ்பர்.. நடு ரோட்டில் மல்லாக்க கவிழ்ந்தது!
Recommended Video
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில் நல்ல தம்பி சாலையில் டிரான்ஸ்பார்மர் நடுரோட்டில் விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
பம்மலில் உள்ள நல்லதம்பி சாலை எப்போதும் பிசியான சாலை. பல்லாவரத்தில் இருந்து பம்மல் வழியாக பொழிச்சலூர், அனகாபுத்தூர் செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றிற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் சிறு தூறலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. வழக்கமாக மழை பெய்யும்போது வீசும் காற்று கூட வீசவில்லை. இந்த நிலையில் பம்மல் நல்லதம்பி சாலையில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென சாலையில் அப்படியே பெயர்ந்து விழுந்தது. அப்போது சாலையில் வழக்கமான போக்குவரத்தும் இருந்தது.
பார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்!
மாலை வேளை என்பதால் நடந்து செல்வோரும் அங்கும் இங்குமாக சென்று வந்து கொண்டிருந்தனர். ஆனால் நல்வாய்ப்பாக நடு சாலையில் விழுந்த இந்த டிரான்ஸ்பார்மர் யார் மீதும் விழவில்லை. டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்த வேளையில் சில அடி தூரத்தில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. சில நொடிகள் தாமதித்ததால் அந்த கார் தப்பியது.
நேற்று மாலையில் விழுந்த டிரான்ஸ்பார்மரை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கீழே விழுந்த அந்த டிரான்ஸ்பார்மர் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அப்பகுதி மக்கள் இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகின்றன. தரமில்லாத கம்பி மற்றும் சிமெண்டை பயன்படுத்தி இந்த டிரான்ஸ்பார்மருக்கான தூண் கட்டப்பட்டதாலேயே இப்போது இது கீழே விழுந்துள்ளது.
இந்த டிரான்ஸ்பார்மர் சில நொடிகள் தாமதமாக கீழே விழுந்திருந்தால் சில அடி தூரத்தில் வந்து கொண்டிருந்த காரும் அதில் பயணித்தோரும் நசுங்கி இருப்பார்கள். நல்வாய்ப்பாக அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. ஒப்பந்ததாரர்கள் லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொள்வதால் தாங்கள் செய்யும் வேளைகளில் தரத்தை பார்ப்பது இல்லை. அதனாலாயே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன.
மின்வாரியம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.