தென் சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை.. வீட்டை காலி செய்யுமாறு கூறும் உரிமையாளர்
சென்னை: தென் சென்னை தொகுதியில் சுயேச்சையாக திருநங்கை ஒருவர் போட்டியிடுவதால் அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
தென் சென்னை தொகுதியானது தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம், விருகம்பாக்கம், வேளச்சேரி, சோளிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
திமுகவின் கோட்டையான இந்த தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரங்கராஜன், அமமுக சார்பில் இசக்கி சுப்பையா, நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வீட்டை காலி செய்ய
இந்நிலையில் இந்த தொகுதியில் சுயேச்சையாக திருநங்கை ஒருவர் களம் இறங்குகிறார். இவரது பெயர் சுதா, வயது 50 ஆகும். இவர் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவதால் இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வற்புறுத்துவதாக புகார் எழுந்தது.
3 ஆண்டுகளாக
சுதாவின் வீட்டு உரிமையாளர் அதிமுகவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருநங்கை சுதா கூறுகையில் மந்தைவெளி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறேன்.
முக்கிய தலைகள் மோதும் தர்மபுரி.. இந்த ஒரு தொகுதிக்கு இத்தனை சிறப்பம்சமா?
வீடு கிடைப்பது சுலபமல்ல
அந்த வீட்டு உரிமையாளர் அதிமுகவை சேர்ந்தவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னிடம் வந்து தேர்தலில் ஏன் போட்டியிடுகிறாய். நீ உடனே வீட்டை காலி செய்யுமாறு கூறிவிட்டார். இதனால் நான் வேதனை அடைந்துள்ளேன். திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
தவறாக நினைப்பு
நான் பிஏ ஆங்கிலம் படித்திருக்கிறேன். இருந்தும் எனக்கு செல்லும் இடங்களிலெல்லாம் வேலை மறுக்கப்படுகிறது. அதனால் வீட்டு வேலைகளை செய்து வருகிறேன். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் திருநங்கைகள் பற்றி மக்கள் தவறாக நினைத்திருப்பதை மாற்ற விரும்புகிறேன்.
பெண்களின் பாதுகாப்பு
மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்க பாடுபடுவேன். வெற்றி கிடைத்துவிட்டால் பெண்களின் பாதுகாப்பு என் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் என்றார் சுதா. இவர் மந்தைவெளி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.