மதுரை, கோவை, சேலம், திருச்சி அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: விஜயபாஸ்கர்
சென்னை: மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சுகாதார துறை செய்துவருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: உடல் உறுப்புதான அறுவை சிகிச்சைகளை இந்தியாவில் தொடர்ந்து ஒரு முன்னணி மாநிலமாக விளங்கி, விருதுகளைப் பெற்று வருகிறது தமிழகம்.
அந்த வகையில் 2018ஆம் ஆண்டு நான்காவது முறையாக மத்திய அரசிடமிருந்து உடலுறுப்பு தானத்திற்காக சிறந்த முதல் மாநிலம் என்ற முதல் பரிசை நாம் பெற்றிருக்கின்றோம். உடல் உறுப்புதானத்தில் விழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
அந்த காரணத்தால் உடல் உறுப்பு தானத்தில் ஒரு மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை கின்னஸ் சாதனையை செய்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
இன்னும் வரும் காலத்தில் இந்த மகத்தான சாதனையை தொடர்ந்து அனைத்து நிலை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனை மட்டுமல்லாமல் மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி போன்ற மருத்துவமனைகளிலும் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் transplant அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.