சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. கடற்கரை சாலைகளிலும் தடை
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அது போல் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் காணப்படுகிறது. இந்த புயலானது இன்று மாலை அதி தீவிர புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ. வேகத்தில் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்தே சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. அபாயத்தை உணராமல் கரைகளில் செல்பி எடுக்கும் மக்கள்!.. விரட்டும் போலீஸ்
மக்கள்
எனினும் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளில் மக்கள் வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்தை காவல் துறையினர் ரத்து செய்தனர்.
விழுந்த வாகன ஓட்டிகள்
இந்த சாலைகளில் காற்றின் வேகம் இப்போதே பலமாக வீசுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களையே அசைக்கும் அளவுக்கு காற்று வீசுவதால் பலர் காமராஜர் சாலையில் சறுக்கி விழுந்ததாக போலீஸார் கூறுகிறார்கள்.
3 சாலைகளில்
இதையடுத்து சாந்தோமிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகன ஓட்டிகளை டிஜிபி அலுவலகம் வழியாக டிடிகே சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். மாலை 4 மணி முதல் புயல் கரையை கடக்கும் வரை 3 சாலைகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர்
புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல் துறை எடுத்துள்ளது. அது போல் பெசன்ட் நகர் சாலை, திருவான்மியூர் கடற்கரை சாலையும் மூடப்பட்டுள்ளது. கிளைச் சாலைகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டாலும் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மரங்கள் விழுந்து சாலைகளே ஸ்தம்பித்துள்ளது.