எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவுகள்... நம்பகத்தன்மையை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?
இடைத்தேர்தலை ரத்து செய்வதால் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மை குறையாதா?
Recommended Video
சென்னை: இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தேர்தல் ஆணையம் மாறி மாறி முடிவுகளை சொல்லி கொண்டிருந்தால் எப்படி?
பொதுவாக தேர்தல் அறிவிப்பு என்றால், மாநில அரசுடன் கலந்து பேசிதான் ஆணையம் முடிவு செய்யும். அப்படி என்றால் ரெட் அலர்ட் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டபோது, அரசுடன் ஒன்று கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவு, இப்போது எடுக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
கோர்ட்டில் வழக்கு தொடுக்க சொல்லப்படும் காரணம் இரண்டு விஷயங்கள். ஒன்று, கஜா புயல் நிவாரணத்தை அரசு இன்னும் முழுமையாக தரவில்லை, மற்றொன்று ஓட்டுப்போட மக்களின் ஆவணங்கள் எல்லாம் அழிந்துவிட்டதால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சொன்னது.
திரும்பவும் ரத்து
ஆனால் நிவாரண உதவிகளை தொடர்ந்து தரலாம் என்று உத்தரவிடப்பட்டுவிட்டது, அதோடு ஓட்டுப்போட எந்த ஆவணங்கள் இல்லை என்றாலும், பூத் சிலிப் இருந்தால் போதும், ஓட்டு போடலாம் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மைதான். இப்படி இருக்கும், திரும்பவும் கஜா புயல் நிவாரணத்தையே காரணம் காட்டி நிறுத்தியுள்ளது பெருத்த சந்தேகத்தை, குழப்பத்தை தேர்தல் ஆணையம் மீது ஏற்பட்டுள்ளது.
எளிது கிடையாது
முன்பு ஒரு முறை முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சொல்லும்போது, "ஒருமுறை இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டால் மீண்டும் அங்கு தேர்தலை நடத்துவது அவ்வளவு எளிது கிடையாது" என்று சொல்லி இருக்கிறார். அதனால் இப்போது ரத்து என்ற அறிவிப்பிலிருந்து தேர்தல் ஆணையம் தன் நிலைப்பாட்டை அவ்வளவு எளிதாக மாற்றி கொள்ளாது.
ஆர்.கே.நகர்
ஆனால் இதற்குமுன்பு ராணிப்பேட்டையில் 2 முறை இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு நடந்த வரலாறு உண்டு. அதேபோல, ஆர்.கே.நகரிலும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தலை நடத்தியதை கண்ணால் கண்டோம். ஆனால் இதுபோன்றெல்லாம் இப்போது நடக்குமா என்பதன் சாத்தியக்கூறுகள் தெளிவாக தெரியவில்லை.
மனோபாவம்
இப்படி ரெட் அலர்ட் மழையின்போது இடைத்தேர்தல் ரத்து, இப்போது கஜா புயலை காரணம் காட்டி இடைத்தேர்தல் ரத்து என்றால் தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை மக்களுக்கு குறையாதா? இப்படிப்பட்ட அறிவிப்புகள், உத்தரவுகளை அடுத்தடுத்து வரப்போகிற பெரிய பெரிய தேர்தல்களுக்கும் பொருத்தி பார்க்கும் மனோபாவம் மக்களுக்கு வராதா?
கள நிலவரம்
எப்படி பார்த்தாலும், தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டால், அதில் நீதிமன்றமும் தலையிட முடியாது. ஆணையத்தின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்ற பட்சத்தில், ஏன் திருவாரூர் தொகுதியை முதலிலேயே ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும், கள நிலவரத்தை சரியாக ஆய்வு செய்யவில்லையா என்பதும் சாதாரண மக்களுக்கும் கேள்வியாக எழுந்து செல்கிறது.
நம்பகத்தன்மை
ஒட்டுமொத்தமாக, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே இருந்த காரணத்தைதான் தேர்தல் ஆணையம் இன்றைக்கும் சொல்லி இருக்கிறது. இதனால் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை மக்கள் நாளுக்கு நாள் இழந்து கொண்டுதான் வருகிறார்கள்.