நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் (TRBPG Exams).. விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி
Recommended Video
சென்னை: நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் தொலைதூர மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டன..
விண்ணப்பிக்கும்போதே தேர்வு மையங்களுக்கான ஆப்சன்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் முதலில் சொந்த மாவட்டங்களையும் பின்னர் பக்கத்தில் உள்ள மாவட்டங்களையும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்திருந்தனர்.
இந்த தேர்வுகள் நாளை முதல் 29-ந் தேதி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு மாதிரியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையத்தில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன் லோடு செய்த விண்ணப்பதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் தொலைதூர மாவட்டங்களை தேர்வு மையமாக ஒதுக்கி இருந்தது தேர்வு வாரியம்.
உதாரணமாக திண்டுக்கல்லை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பொதுவாக திண்டுக்கல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பிப்பர். ஆனால் திண்டுக்கல் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் பல தொலை தூர மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் பெண் விண்ணப்பதாரர்கள் பலரும் தேர்வே எழுதாவிட்டாலும் பரவாயில்லை என்கிற விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மையங்கள் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தானிலும் ஒதுக்கப்பட்டிருந்த அவலத்தைப் போல தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய மையங்களும் ஒதுக்கப்பட்டிருப்பது என்பது விண்ணப்பதாரர்களின் வேதனை.