ஆட்டத்தை ஆரம்பித்த கருணாஸ்.. "அவங்களுக்கு" தந்தால் எங்களுக்கும் தந்தாக வேண்டும்.. அதிமுகவுக்கு செக்
இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார் கருணாஸ்
சென்னை: சசிகலாவின் வருகையை முன்வைத்து, கருணாஸ் தன் ஆட்டத்தை மீண்டும் தொடங்கி உள்ளார்.. அதிமுகவுக்குள் இது சிக்கலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி வருகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடந்தது.. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவுசெய்ய இன்னும் காலம் உள்ளது.
பாமக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கிறது. பிற சமூகத்தினரை வஞ்சித்து, குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் சலுகைகள் வழங்க வேண்டும் என்பது தவறானது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சசிகலா
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோர் சமூகத்துக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எங்களது சமூகமும், பிற சமூகங்களைப்போல பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 27 ஆண்டுகள் உடனிருந்தவர் சசிகலா. 1991 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதா அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது உடனிருந்துள்ளார். சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவதை வரவேற்கிறோம்" என்றார்.
இட ஒதுக்கீடு
கருணாஸின் இந்த பேட்டியில் 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கது.. ஒன்று, பாமகவுக்கு இடஒதுக்கீடு தந்தால் தங்களுக்கும் வேண்டும் என்று கேட்கிறார்.. இதைதான் அன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர்.. பாமகவுக்கு இடஒதுக்கீடு தநதுவிட்டால், மற்ற கட்சிகள் வரிசையாக வந்து இடஒதுக்கீடு கேட்க தொடங்கிவிடுவார்கள், அதனால், பாமகவை கழட்டிவிடுங்கள்" என்ற ஆலோசனையையும் எடப்பாடியாரிடம் சொல்லி உள்ளனர்.
தைலாபுரம்
இதற்கு பிறகுதான், தைலாபுர தோட்டத்துக்கு 2 அமைச்சர்கள் கூட்டணியை உறுதி செய்ய சென்றபோதிலும், இடஒதுக்கீடு விஷயத்தில் எந்தவித நம்பிக்கையையும் தராமல் திரும்பி வந்துவிட்டனர்.. 2 நாளைக்கு முன்புகூட ஜிகே,மணி, மூர்த்தி போன்ற பாமகவின் மூத்த தலைவர்கள் சந்தித்தபோதுகூட, இந்த இடஒதுக்கீடு குறித்த பேச்சுக்கு எந்த நம்பிக்கையும் தெரிவிக்கப்படவில்லை.. இப்போதுவரை இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக உறுதியாக இருக்கிறது.. இதைதான் கருணாஸும் பயன்படுத்தி கொண்டுள்ளார்.. இது அதிமுகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில்தான் உள்ளது.
கூவத்தூர்
இதற்கு இன்னொரு காரணம், சசிகலாவின் வருகையும்தான்.. அன்று கூவத்தூர் சம்பவத்தில் அதிக அளவு பேசப்பட்டவர், சர்ச்சைகளுக்கு உள்ளானவர், சலசலப்பை ஏற்படுத்தியவர், கருணாஸ்தான்.. சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே இப்போது வரை கருதப்படுகிறார்.. ஜெயிலுக்குள் சசிகலா இருந்தபோதுகூட, எடப்பாடியாருக்கு முழு ஆதரவாக கருணாஸ் செயல்படாமல் இருந்ததே, சசிகலா மீதான விசுவாசத்திற்கு உதாரணமாகும்.
நிறைவேறுமா?
இப்போது சசிகலாவின் வருகை நிகழ உள்ளதால், கருணாஸுன் கெடுபிடியும், கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.. எப்படி பார்த்தாலும், விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இட ஒதுக்கீடு என்பது சாத்தியமாகுமா? தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்பதெல்லாம் தெரியவில்லை... ஆனால், அதிமுக வெற்றிக்காக பாமகவுக்கு கோரிக்கையை அதிமுக நிறைவேற்றுமா? அல்லது சசிகலா ஆதரவாளர் என்பதால் கருணாஸின் கோரிக்கையை நிறைவேற்றுமா? அல்லது 2 பேருக்குமே கல்தாவா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.