பேசாம திருச்சியை 3 ஆக பிரிச்சிருங்க.. இல்லாட்டி திமுகவை சமாளிக்க முடியாது.. அதிமுகவில் அவசர கோரிக்கை
திருச்சியை 3 ஆக பிரிக்க அதிமுகவில் கோரிக்கை எழுந்து வருகிறது
சென்னை: ஒருபக்கம் சீனியர் கே.என். நேரு.. இன்னொரு பக்கம் ஜூனியர் அன்பில் மகேஷ் என திருச்சி மாவட்டத்தின் மொத்த பணியையும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரித்துக் கொடுத்து திமுக கலக்கலாக வேலை பார்த்து வருவது அதிமுகவை அதிர வைத்துள்ளதாம்.
இப்படி இழுத்து போட்டு கொண்டு திமுக தரப்பு வேலை செய்து வருவதால் வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கை ஓங்கி விடும் வாய்ப்புள்ளது. எனவே அதிமுகவை ஜெயிக்க வைக்க வேண்டுமானால் மாவட்டத்தை 3 ஆக பிரித்து அதிமுகவுக்கு நிர்வாகிகளை நியமித்தால்தான் நல்லது என்று அக்கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளதாம்.
ஜெயலலிதா இருந்தபோது, திருச்சி மாவட்டத்துக்கு தனி முக்கியத்துவம் தருவார்.. அதனால்தான், அவர் கடைசியாக சந்தித்த உள்ளாட்சி தேர்தலில்கூட, எல்லா ஊரக பதவிகளையும் அதிமுகவுக்கே திருப்பி விட்டு வெற்றியை பெற்று தந்தனர் திருச்சி அதிமுகவினர்!
ஆனால் கடந்த முறையோ அதிமுக உள்ளாட்சி தேர்தலில் சோபிக்கவில்லை.. இத்தனைக்கும் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என 2 அமைச்சர்கள் அங்கு இருந்தும் திமுகவின் நேருவின் வியூகத்துக்கு முன்னால் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.. இதனால் எடப்பாடியார் தரப்பு எரிச்சல் அடைந்ததாகவும் சொல்லப்பட்டது.
இப்போது திமுக மேலும் பலம் பொருந்தி வருகிறது.. அன்பில் மகேஷ் தலைமையில் இளைஞர் படை ஒரு பக்கமும், கட்சியின் சீனியரான நேரு இன்னொரு பக்கமும் என திருச்சியை அமர்க்கப்படுத்தி வருகிறார்கள். அதனால் இந்த முறை எப்படியாவது திருச்சியை கைப்பற்ற அதிமுக வலுவான வியூகத்தை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. ஆனால் நடக்கிற சம்பவங்களை எல்லாம் பார்த்தால் திருச்சி அதிமுகவுக்கு கிடைக்குமா என்ற டவுட்தான் வருகிறது.
நேற்றுகூட, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார். அப்போது 30-க்கும் மேற்பட்டோர் திடுதிப்பென அங்கே உள்ளே புகுந்து, தங்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.. அங்கிருந்த சேர்களையும் எடுத்து அடிக்க ஆரம்பிக்க கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்துள்ளனர்... அந்த இடமே போர்க்களம் போல மாறிப் போனது. உட்கட்சி பூசல் இப்போது வரை திருச்சியில் உள்ளது என்பதையே நேற்றைய சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான் திருச்சி மாவட்டத்தை 3 மாவட்டமாக பிரித்தால், அதிமுக ரொம்ப ஈஸியாக ஜெயிக்க முடியும் என்ற கருத்து ஒருமித்தமாக எழுந்துள்ளது.. இதில், திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளராக டி.ரத்தினவேலுவை நியமிக்கலாம் என்ற கோரிக்கையும் சேர்ந்து எழுகிறது.. இதற்கு காரணம், 8 வருஷங்களாக இவர் பதவி வகித்தவர்.. எம்பியாக பணியாற்றிய போது மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்சியை வளர்ச்சி அடைய செய்தவர் என்பதால் இவர்மீது நம்பிக்கை அதிகமாக உள்ளதாம்... இவர்மீது எந்த புகாரும் இதுவரை இல்லாததால், இவர் மீது ஆழ்ந்த நம்பிக்கையை சொல்லி வருகிறார்கள்.
அதேபோல, திருச்சி வடக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்ததில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் புறநகர் மாவட்டத்தை மூன்றாக பிரித்தால் கட்சியை வளர்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று அதிமுக அடிமட்ட முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை நினைக்கிறார்கள்... வடக்கு மாவட்டத்தில் 4 தொகுதிகள் இருக்கிறது.. ஶ்ரீரங்கம், துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் தொகுதிகளும், தெற்கு மாவட்ட கழகத்தில் மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி ஆகிய தொகுதிகள் வருகிறது.
ஆகையால் தொண்டர்களை திருப்திப்படுத்தும் வகையில் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கட்சி நிர்வாக ரீதியாக 3 மாவட்டமாக பிரித்ததை போல திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டம் என பிரித்தால் கட்சியை வளர்ப்பதற்கு நன்றாக இருக்கும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்... இதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.