புத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு
சென்னை: தினமும் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும் வாசிப்பு மனிதனை செழுமைப்படுத்தும் கருவி எனவும் திமுக மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு செய்த இளைப்பாறுவோம் இலக்கிய நிழலில் என்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார்.
மேலும், பாரதியார், பாரதிதாசன், இன்குலாப் போன்றவர்களின் படைப்புகளை வாசித்தால் அது யாரையும் கவிதைகள் எழுத தூண்டும் எனக் குறிப்பிட்டார்.
ராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு
திருச்சி சிவா
இளைப்பாறுவோம் இலக்கிய நிழலில் என்ற தலைப்பில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய திருச்சி சிவா, தமிழ் மொழியை போல் ஒரு மொழியை உலகில் எங்கும் பார்க்க முடியாது எனக் கூறினார். மேலும், உலக மொழிகளில் தமிழை போன்று ஒரு இனிமை வேறு எந்த மொழிக்கும் கிடையாது என புகழாரம் சூட்டினார். உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பெருமிதம் தெரிவித்தார்.
எழுதுகோல்
செங்கோல் பெரிதா எழுதுகோல் பெரிதா என்றால் எழுதுகோல் தான் பெரிது என்றும், இதன் காரணமாகவே 2,000 ஆண்டுகளை கடந்தும் திருவள்ளுவர் இன்னும் வாழ்ந்து வருவதாக திருச்சி சிவா தெரிவித்தார். அந்தளவுக்கு எழுதுகோல் வலிமை வாய்ந்தது எனக் கூறினார். மேலும், இன்று அலைபேசி உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் அனைவரும் எழுத்தாளர்களாக எழுதத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இரவு 2 மணி வரை
கொரோனா காலத்தில் தற்போது வீட்டில் இருப்பதால் புத்தகம் வாசிப்பு தான் தனது பொழுதுபோக்கு என்றும், இரவில் 2 மணி வரை கூட புத்தகங்கள் வாசிப்பதாகவும் தெரிவித்தார். புத்தகம் வாசிப்பதன் மூலம் தான் மனிதன் செழுமையடைய முடியும் என திருச்சி சிவா தெரிவித்தார். அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் தினமும் 20 பக்கங்களாவது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் என்றும், இதனை அவர்களே கூறக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
20-ம் நூற்றாண்டு
20-ம் நூற்றாண்டி தான் தமிழ் இலக்கியம் செழுமை அடையத் தொடங்கியதாகவும், இன்று எழுத்தாளர்களும், கவிஞர்களும் பெருகிவிட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். காணொலி மூலம் நடைபெற்ற இந்த இலக்கிய கருத்தரங்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு செய்திருந்தார்.