மும்மொழிக் கொள்கை... தமிழகத்தில் தவறான புரிதல் உள்ளது... அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு
சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை இந்தியை மட்டுமே சார்ந்தது என தமிழகத்தில் தவறான புரிதல் உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தநிலையில், ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முதலமைச்சர் பழனிசாமி, பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிப்பது உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்மூலம் இந்தியை 3-வது மொழியாக ஏற்க முதலமைச்சர் ஆதரவு தருகிறாரா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
பின்னர், டுவிட்டரில் இருந்து குறிப்பிட்ட அந்த பதிவை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்தநிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கிடையே மொழிகள் கற்பித்தலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். மும்மொழி தொடர்பான முதலமைச்சரின் நீக்கப்பட்ட ட்விட்டர் பதிவில் தவறேதும் இல்லை எனவும் கருத்து தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கையை இந்தியை மட்டுமே மையப்படுத்தி தமிழகத்தில் தவறான புரிதல் உள்ளதாகவும் அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்க 3 வாரம் அவகாசம் இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் பாண்டியராஜன், புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அமைச்சரவையில் விவாதித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.