மு.க.ஸ்டாலினை கே.சி.ஆர். சந்திக்கிறார் என்பது வதந்தியாம்... கிளப்பிவிட்டது பாஜகவா?
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் சந்திக்கிறார் என வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திதான் என்கின்றன திமுக வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 23-ந் தேதியன்று வெளியாகின்றன. இத்தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையவே வாய்ப்புகள் இருக்கின்றன என்பது அனைவரது கருத்து.
எதிர்க்கட்சிகள் கர்நாடகா பாணியில் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக்கும் திட்டத்துடன் சந்திரசேகர ராவ் காய் நகர்த்துவதாகவும் ஆரூடங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சந்திரசேக ராவ் மகள் கவிதா, ஸ்டாலினை சந்திக்க இதுவரை எந்த அப்பாயிண்ட்மென்ட்டும் வாங்கவில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக தரப்பில் நாம் விசாரித்த போது, சந்திரசேகர ராவை சந்திப்பது தொடர்பாக ஸ்டாலின் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
1996 பிளான்.. சந்திரசேகர ராவ் அதிரடி மூவ் பின்னணி.. ஸ்டாலினுக்கு அடிக்கிறதா ஜாக்பாட்?
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவை தனிமைப்படுத்தும் பாஜகவின் சதித்திட்டமாக இப்படி ஒரு வதந்தி கிளப்பிவிடப்பட்டிருக்கலாம் என திட்டவட்டமாக தெரிவிக்கின்றன.