ஏவுகணை சோதனை.. கிம் ஜாங்கை சந்தித்தார் அமெரிக்க அதிபர்.. வடகொரிய எல்லை தாண்டிய முதல் அதிபர் டிரம்ப்
சென்னை: வடகொரியா நடத்தி வரும் ஏவுகணை சோதனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார்.
ஐநா சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் ஆகியவற்றை வடகொரியா தொடர்ந்து சோதனை செய்து சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு ஆளாகியது.
இதை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன. எனினும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவும், வடகொரியாவும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இருவரும் டுவிட்டரில் வார்த்தை யுத்தத்தையே நடத்தினர். இந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வடகொரியா- தென்கொரியா இடையே அமைதியை ஏற்படுத்த வழிவகை செய்தது.
டிரம்பும், கிம் ஜாங்கும் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டினர். இதை முன்னெடுத்தவர் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன். எதிரெதிர் திசையில் பயணித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய அதிபர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து கொண்டனர்.
அப்போது பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது. எனினும் நிரந்தர தீர்வு காண வியத்நாமில் சந்தித்து பேசிய போது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கொரிய நாட்டின் எல்லைப் பகுதியில் அதிபர் கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்தனர். இந்த எல்லையில் டிரம்ப்பை சந்திப்பேன் என நான் எப்போதும் எதிர்பார்த்ததில்லை என கிம் தெரிவித்தார்.
வடகொரியா எல்லையை தாண்டி கிம்மை சந்தித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்தான். முன்னதாக எல்லையை தாண்டி தன்னை சந்திக்க வர முடியுமா என டிரம்பிடம் கிம் ஜாங் கேட்டார். அதற்கு டிரம்ப், அவ்வாறு உங்களை சந்திப்பதை நான் கவுரமாக கருதுகிறேன் என்றார். இதை கிம்மே விவரித்தார்.