மனித உயிர்களை சோதனை கூடப் பொருளாக்க முயற்சி.. மத்திய, மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சந்தேகம்
சென்னை: அணு உலைக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சேமிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில், மத்திய பாஜக அரசு செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அணு உலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்க அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூடங்குளம் அணுக்கழிவுகளை அணு உலை வளாகத்துக்குள் சேமித்து வைக்க 'AFR'(Away From Reactor) கட்டும் முடிவினை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ராஜன் செல்லப்பா ஆரம்பம்தான்.. அடுத்தடுத்து நிறைய கிளம்பப் போகுதாம்!
மேலும் கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முற்றிலும் மாறாக, கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிடுவது கடும் கண்டனத்திற்குரியது. கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் ஏற்படுத்திட நிபந்தனை விதித்தது.
இந்த முக்கியமான அந்த நிபந்தனையை நிறைவேற்ற 5 ஆண்டு காலக்கெடு 2018 மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில், தேசிய அணுமின் கழகம் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்டு தள்ளிக்கொண்டே போவது வேதனையளிக்கிறது. 2022-ம் வருடத்திற்குள் AFR கட்டி முடிக்க என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ள நிலையில், ஜூலை 10ம் தேதி ராதாபுரத்தில் பொதுமக்கள் "கருத்துக் கேட்புக் கூட்டம்" நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகவும் இருக்கிறது என சாடியுள்ளார்.
தமிழக மக்களின் உயிரைப் பணயமாக வைத்து- சுற்றுப்புறச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் விதத்தில் கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே AFR வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை சோதனைக்கூடப் பொருட்களாக ஆக்குவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்ற சந்தேகமே எழுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் இதை தான் நாங்கள் அரசுகளுக்கு எப்போதும் சொல்கிறோம் எச்சரிக்கையாக இருங்கள். எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். தொடர்ந்து விழிப்புடன் இருப்பது உங்களது கடமை. எவ்வித மெத்தனத்திற்கும், துளி தூக்கத்திற்குக்கூட இடம் கொடுத்து விடாதீர்கள் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் நன்கு நினைவில் கொண்டு மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.