பெட்ரோல்- டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை-நிதி அமைச்சர் பிடிஆர் கருத்துக்கு தினகரன் கண்டனம்
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதி அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை வதைக்கும் பெட்ரோல்,டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை
அதே நேரத்தில்,அவற்றின் மீதான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க, தற்போது அதனை செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலை. மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும் போது தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா?
சென்னையில் ரூ 99 நெருங்கியது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை.. இப்படியே போனா இனி சைக்கிள்தான் போலயே!
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வராமல்,விலைவாசியை எப்படி குறைக்க முடியும்?எனவே,பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.