நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு- டிடிவி தினகரன் கடும் கண்டனம்
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
காவிரி டெல்டாவின் ஒரு பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இப்பிரச்னையில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு நடந்து கொள்வது சரியானது அல்ல.
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் நெடுவாசல் வருவதால், தமது ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.